வண்ணக் கொப்பரையில்
தூரிகை விழுந்து
தற்கொலை
செய்துகொள்வதுபோல்
கனவு வந்தபோது
அவன் அலறி துடித்து
எழுந்தான்
அந்த உணர்வின்
தருணம்தான்
அவனை
ஓவியனாக்கியது
வண்ணக் கொப்பரையில்
தூரிகை விழுந்து
தற்கொலை
செய்துகொள்வதுபோல்
கனவு வந்தபோது
அவன் அலறி துடித்து
எழுந்தான்
அந்த உணர்வின்
தருணம்தான்
அவனை
ஓவியனாக்கியது
பறவைபோன
தடத்தில்
மிதந்துகொண்டிருந்தன
வார்த்தைகள்
எதுவும்
பிரிந்துபோகாமல்
காற்று
மெல்ல ஊதி ஒன்றாக்கி
என்னிடம்
கொண்டுவந்து
சேர்த்தது
கவனித்து
வரிசையாக்கி
இசைலயத்தோடு
எழுதினேன்
பிறகு
பாடியபோது
அதே
பறவை
ஒரு
கிளை மீதமர்ந்து
கேட்டுக்கொண்டிருந்தது
சுவரில் சாய்ந்து
எங்கேயோ பார்த்து
எதையோ முணுமுணுக்கிறாய்
நான் அதற்குச்
சொற்களை யோசிக்கிறேன்
நீ கேட்டு
முணுமுணுப்பில் பொறுத்திப் பாடுகிறாய்
உயிர் பெறுகிறது
பாடல்
வியப்பு மேலிடக்
கேட்கிறேன்
இந்தப் பாடல்
எங்கிருந்து வந்தது
உன் முணுமுணுப்பிலிருந்தா
இல்லை எனத்
தலையாட்டுகிறாய்
என் சொற்களிலிருந்தா
மறுபடியும்
மறுக்கிறாய்
பிறகு எங்கிருந்து
வந்தது
கண்களைத்
துடைத்துக்கொண்டு
சொல்கிறாய்
துயரத்திலிருந்து
உங்களை எப்போது
விடுதலை செய்யப்போகிறீர்கள்
நினைவுகளில்
அடைபட்டிருக்கிறீர்கள்
கனவுகளில்
சிறைபட்டிருக்கிறீர்கள்
கட்டளைகளுக்குக்
கட்டுப்பட்டிருக்கிறீர்கள்
எதிர்பார்ப்புகளில்
அகப்பட்டிருக்கிறீர்கள்
தேவைகளில்
திணிக்கப்பட்டிருக்கிறீர்கள்
ஆசைகளில்
அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்
சொல்லிக்கொண்டே
வந்தவர்
சொல்லிக்கொண்டே
போனார்
அவர் சொல்லியது
கேட்டுக்கொண்டே
இருந்தது
உங்களை எப்போது
விடுதலை செய்யப்போகிறீர்கள்
கடவுளின் தோள்மேல்
அமர்ந்திருக்கிறேன்
எனச்சொன்னது
மலைமேல்
அமர்ந்திருந்த குழந்தை
எப்போது
கீழே வருவாய்
குரல் எதிரொலிக்கக் கேட்டேன்
கடவுள் எனக்குக்
கதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்
கேட்டு முடித்தவுடன்
வருவேன் என்றது
வந்தபின்
அந்த கதையை எனக்குச் சொல்வாயா
ஆர்வம் கூட கேட்டேன்
கடவுள் எனக்குச் சொன்னக்
கதையைச் சொல்ல மாட்டேன்
நான் மலைக்குச் சொன்னக்
கதையைச் சொல்கிறேன் என்றது
நகரத்திற்குப் புதிதாக வந்த இளைஞன் அவன்
இந்த
நகரத்துல எங்கையாவது
அன்பு
தென்படுமான்னு பாத்தேன்
அது
உங்க கண்ல இருக்கு என
எதிர்படும்
பெண்ணிடம் சொல்கிறான்
கண்டறிந்த பெருமிதத்தோடு
இதை
எதிர்பார்க்காத
நகரத்திற்குப்
புதிதாக வந்திருக்கும் பெண்
அவனைப்
பார்க்கிறாள்
அவள்
பேருந்து வருகிறது
என்ன
சொல்றதுன்னு தெரியல
உங்க
கண்ல
நம்பிக்கை
தெரியுது
சொல்லிவிட்டு
வேகமாக
ஓடிப்போய்ப்
பேருந்தில்
ஏறுகிறாள்
1
வழியே
வழி
காட்டும்
போ
2
நிற்காதே
தேங்கிப்போவாய்
3
கண்களுக்கு
விழிப்பை
ஊட்டு
4
நீ
நடைப்போராளி
5
கால்களின்
பாடல்
கேள்
இசைபோல்
நட
6
தடைக்கற்களில்
வேகத்தின்
குறிப்புகள்
இருக்கட்டும்
7
மூச்சுக்காற்றுக்கு
நன்றி
சொல்
உன்னை
முந்திச்
செல்பவனை
முந்திச்
செல்
8
நேரம்
முக்கியம்
உன்னோடு
உரையாடு
போதும்
9
கேள்வி
அழைத்துப்போகும்
விடை
வேகமாக்கும்
10
களைப்படையா
கர்வம் கொள்
11
நினைவுகளில்
பயணக்குறிப்புகளை
எழுதி
வை
12
இமை
மூடித்
திறப்பதற்குள்
பாய்ந்து
பழகு
13
கால்களைச்
சிறகுகளாக்கு
பாதைகளை
வானமாக்கு
கையிலிருந்த தினசரியில் செய்திகள் கனத்தன
எண்ணூரில்
எண்ணெய்ப் படலம்
என்னென்னவோ
சொல்கிறார்கள்
கவலை
பாரமாய் அழுத்துகிறது
ஏரிகள்
காணாமல் போய்விட்டன
கட்டிடங்கள்
முளைத்துவிட்டன
இவரைக்
கேட்டால் அவரைச் சொல்கிறார்
அவரைக்
கேட்டால் இவரைச் சொல்கிறார்
கூசாமல்
குவித்து வைத்திருக்கிறோம்
குப்பைகளையும்
பொய்களையும்
வெட்கமின்றி
உலா வருகின்றன
ஊழல்
முகங்கள்
தீர்வைத்
தர வேண்டும்
உணவுப்பொட்டலங்களோடு
முடிந்து விடுகிறது
புகைப்பட
வெளிச்சத்தில் பெருமிதங்கள்
எல்லாவற்றிற்கும்
பதில்
வைத்திருக்கிறார்கள்
கேள்வி
கேட்பவர்களின்
வாயை
மூடி விடுகிறார்கள்
இன்னொரு
தேநீர்
பெரியவரிடம்
கேட்டேன்
தலையாட்டினார்
மனுஷன்
நேர்மையா இருந்தா
நாடு
தூய்மையா இருக்கும் என்றார்
சட்டையில்
சிந்திய தேநீரைத்
துடைத்துக்கொண்டார்
அமைதியானவர்
திடீரென
வெடிப்பது
போல்
சொல்லிவிட்டுப்
போனார்
நாக்க
புடுங்கிகிட்டு சாகற மாதிரி
நாலு
வரி எழுதுங்க தம்பி
எதுவும்
தோன்றவில்லை
தினசரியில்
தொலைந்து போனவரோடு
நானும்
தொலைந்து கொண்டிருந்தேன்